மண்ணை தோண்ட விண்ணை எட்டுவான் தமிழன்
இது சித்தர் பாடல்களின் மறைபொருளாகும்
அந்த வரிகளை மெய்பிக்க எண்ணியே ஒரு முயற்சியை முன்னேடுக்கிறேன்
இனி உலகம் முழுவதும் வியாபித்து கிடக்கிற தமிழர்களின் தொன்மையையும்
அகழ்வாராய்ச்சியில் மறைக்கப்பட்ட தமிழர்களின் சிறப்புளையும்
ஆராய்ந்து இந்த பதிவின் வாயிலாக தொடர்க்கட்டுரையாக தரப்போகிறேன்
என்பதில் தமிழனாக மகிழ்ச்சிகொள்ளுகிறேன்
எனது இந்த முயற்சியில் யார் வேண்டுமானாலும் கைகோர்க்கலாம்
உண்மையுடன்
தமிழ்நேசன் த.நாகராஜ்
*****************************
மண்ணை தோண்ட
விண்ணை எட்டுவான் தமிழன் - பாகம் 1
கீழடி அகழ்வாராய்ச்சி!-
மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் வழியில் சிலைமானில் வலது பக்கம் திரும்பி ஒரு 3 கி.மி.ல் ரோட்டிலிருந்து 1கி.மி. செல்லும் ஒத்தையடி பாதையில் தென்னந்தோப்பில் அமைந்துள்ளது. பொதுவாக அகழ்வாராய்ச்சி செய்யும் இடம் வெட்டவெளி – ஒன்றும் விளையாமல் பொட்டல் காடாக இருக்கும். ஆனால் இது ஒரு தென்னந்தோப்பிற்கு நடுவில், இரண்டு தனியார்க்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது.
மதுரைக்கு மிக அருகில் – 15கி.மி. தூரத்தில் அமைந்துயுள்ளது இவ்விடம். மதுரையின் வரலாற்று ஆய்வுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாக பள்ளிசந்தை அமையவுள்ளது. அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஊர் சங்க இலக்கியங்களில் கூறப்படும் பெருமணலாக இருக்க வாய்ப்புயுள்ளதாகக் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சிவகங்கை அருகேயுள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களைக் கொண்டு அங்கே ஒரு அருங்காட்சியகம் உருவாக்கி, அதில் வைத்து பராமரித்து, மேலும் ஆய்வுகளுக்கு வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்தாமல், மைசூருக்கு - கருநாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப் போவதாக வந்துள்ள செய்தி தமிழ்நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒன்றாகும்.
சிவகங்கை அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.10 ஆம் நூற்றாண்டுவரை தமிழர்கள் எத்தகைய நகர்ப்புற வாழ்க்கையை மேற்கொண்டார்கள் என்பதற்கான தடயங்கள், பொருள்கள் கிடைத்துள்ளன. தமிழக அரசு அதற்கான நிலம் ஒதுக்கி அதனை அருங்காட்சியகமாக உருவாக்கவேண்டும் மற்றும் தமிழர் வரலாற்று ஆய்வு அருங்காட்சியகத்தை
அங்கேயே நிறுவ வேண்டும்
மற்றொரு ‘ஹரப்பா...’
அங்கே புதைந்த நகரம்பற்றி அரிய செய்திகள் - சான்றுகள் கிடைத்துள்ளன!
அது மற்றொரு ‘ஹரப்பா’ நகரம் போல,
நமது தமிழ் நாகரிகத்தினைப்பற்றி ஏராளமான
புதிய தகவல்களைத் தரும் ஊற்றுக் கண்ணாக அமைந்தால் அதிசயமல்ல.
நகர்ப்புறங்களை
அறியாதவர்களா தமிழர்கள்?
பழங்காலப் பொருள்களும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி
கி.பி. பத்தாம் நூற்றாண்டுவரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான
புதிய சான்றுகள் இதன்மூலம் நமக்குக் கிட்டியுள்ளன!
சங்ககால நாகரிகம், நகர்ப்புறங்களை அறியாத ஒன்று என்ற
ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை அகற்றிட இந்த அகழ்வாய்வு
புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சிடும் வாய்ப்பை நமக்குத் தரவிருக்கிறது!
இவைகளை வைத்து அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க
மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்!
மதுரை அருகே கீழடியில் புதையுண்ட ஒரு நகரத்தையே அகழ்வாராய்ச்சி மூலம் மத்திய தொல்லியல்துறை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர், அவற்றை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்ல இருப்பதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானது.இது குறித்து தலைமைத் தொல்லியல் அதிகாரி அமர்நாத் கூறுகையில், "கிபி 300-ம் ஆண்டு தொடங்கி 10-ம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. இதைத் பத்திரப்படுத்தி தமிழகத்திலேயே வைக்கதான் அரசிடம் இரண்டு ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதுவரை எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. எனவே, நாங்கள் அகழ்வாராய்ச்சி செய்தவற்றை, எங்கள் மத்திய அலுவலகத்தில் வைத்துப் பாதுகாப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்கிறார்
இதற்கிடையே கீழடி ஆராய்ச்சிகள் குறித்து கட்டுரைகள் எழுதி வரும் சாகித்திய அகாடமி எழுத்தாளர் சு.வெங்கடேசன், "கீழடியில் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார், இது தொடர்பாக அவர் தெரிவித்தது...
"தொல்லியல் பொருட்களை பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லக்கூடாது
என்று நீங்கள் கூறிவருவதற்காக காரணம் என்ன?"
"காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு நாற்பது வருடங்கள் கழித்து இப்போதுதான் மத்திய தொல்லியல் துறை தமிழகத்தில் ஆய்வு நடத்தி இருக்கிறது. அகழ்வு ஆய்வின் போது 5300 தொல்பொருட்கள் கிடைத்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறையின் அகழ்விட அருங்காட்சியகம் இதுவரை நாற்பது இடங்களில் இருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்றுதான் தமிழகத்தில், அதுவும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இருக்கிறது. பெங்களூருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டால் இவையனைத்தும் அங்கே மைசூருவில் இருக்கும் குடோனில்தான் வைக்கப்படும். கீழடி ஆராய்ச்சிகள் பற்றி மக்களுக்குத் தெரிய வேண்டும் எனில், அந்த இடத்திலேயே அருங்காட்சியகம் வைப்பதுதான் சிறந்தது."
"ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சிக்கு
இப்படியான முனைப்புகள் ஏன் எடுக்கப்படவில்லை?"
"இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்கள் கூட தமிழகத்தில் இனக்குழு நாகரிகம் இருந்ததற்கான தடயங்கள்தான் இன்னும் இருப்பதாகக் கூறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் முதன்முறையாக தமிழகத்தில் ஒரு சங்ககால நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி கூட புதையிடம்தான். ஆனால் கீழடியில் தூண்கள், தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் எல்லாம் இருந்த ஒரு நகரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹராப்பா நாகரிகத்துக்கு இணையான தொல்லியல் களம் தென்னிந்தியாவில் இங்கு மட்டும்தான் இருக்கிறது."
"அரசியல் ரீதியாக இந்த ஆராய்ச்சி எவ்விதத் தாக்கத்தை
ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?"
"கருத்து அரசியல் ரீதியாகப் பார்த்தால் தமிழ் பாரம்பரியம் எவ்வளவு செழிப்புடன் இருந்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாக இதைச் சொல்லலாம்."
"கீழடியில் இப்போது என்னென்ன தகவல்கள் கண்டறியப்பட்டிருக்கிறது?"
"கீழடி ஆய்வில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் பிராம்மி எழுத்துக்கள், பிராகிருத மற்றும் சமஸ்கிருத எழுத்துக்கள் கிடைத்திருக்கிறது. ஆப்கான் நாட்டின் சூது பவளமும், ரோமானிய மண்பாண்டமும் 2500 ஆண்டு முன்பான தமிழ் பாரம்பரியத்தில் இருந்திருக்கிறது என்ற தகவல் பல வணிக மற்றும் வரலாற்று ஆராய்ச்சிகளுக்குப் புதியதொரு வழிக்கோளாக அமையும். இப்போது, இருக்கும் மதுரையில் பத்தாம் நூற்றாண்டுக்கு முந்தைய எவ்விதத் தடயங்களும் இல்லை. ஆனால், கீழடியில் பத்தாம் நூற்றாண்டு வரையிலான தகவல்கள் மற்றும் தடயங்கள்தான் கிடைக்கின்றன. சங்க இலக்கியத்தின் படி மதுரை என்பது திருபுவனத்துக்கு நேர் மேற்கேயும் திருப்பரங்குன்றத்துக்கு கிழக்கேயும்தான் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது இருக்கும் மதுரை வடகிழக்கில் இருக்கிறது. இலக்கியம் சொன்ன இடத்தில் கீழடிதான் இருக்கிறது."
"தமிழக அரசிடம் என்ன மாதிரியான கோரிக்கைகளை முன்வைக்கிறீர்கள்?"
"கீழடியில் 110 ஏக்கர் நிலத்தில் வெறும் 50 சென்ட் வரைக்கும்தான் அகழ்வு செய்திருக்கிறார்கள். முழுவதையும் ஆராய்ச்சி செய்ய இன்னும் பத்து, இருபது வருடங்கள் தேவைப்படும். அதனால் இதில் தமிழக அரசின் தொல்லியல் துறையும் இணைந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த 110 ஏக்கரில் பல இடங்கள் தனியார் வசம் இருப்பதால் அரசு தலையிட்டு விரைவில் அந்த நிலங்களைக் கைப்பற்ற வண்டும். அப்போதுதான் தொல்லியல் பொருட்கள் பாதுகாக்கப்படும். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு சார்ந்து இயங்கும் ஒரு அரசின் மாவட்ட ஆட்சியர் கூட கீழடி பகுதியை இன்னும் பார்வையிட முன்வரவில்லை என்பது வருத்தமளிக்கிறது." என்றார்
மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து
நமது தமிழர் பண்பாட்டை பற்றிய தரவுகளும்
தகவல்களும் மறுக்கவும் மறைக்கவும் முயற்சித்து வருகிறது
உலக தமிழர்கள் அனைவரும் மீண்டும் ஒருமித்து
நமது தரவுகளை மீட்டேடுப்போம் வாருங்கள்
தோண்டல் தொடரும்...