சனி, 14 நவம்பர், 2015

ஆம் யாம் தமிழன்.....

தேமதுரத் தமிழோசை!
தேசத்தின் நேசப்பறவை!
தேயாத தினக் கற்கண்டு!
தேன் கலந்த நீரின் சுவை!

விலைக்குப் போகாத உண்மை!
வீசும் புயல்காற்றின் வேகம்!
விடிந்த பொழுதின் வெளிச்சம்!
வீரத்தின் கம்பீர அடையாளம்!

சவாலை முறிக்கும் சினம்!
சாதனை நினைக்கச் சரித்திரம்!
சங்க மரபைக் காக்கும் மாண்பு!
சாத்தியமில்லாப் பெருமையின் சத்தியம்!

மரணத்தைகண்டு அஞ்சாத மாவீரம்!
மங்காத புகழ் கொண்ட வீரவரலாறு!
மக்கள் உணர்வை மதிக்கும் மாமனிதம்!
மண்ணும் விண்ணும் போற்றும் மனோதிடம்!

திங்களின் இனிமை தரும் தாயுள்ளம்!
தீவாய் நாவாய் ஒளிரும் ஆதவன்!
திசைகள் கற்றுத்தந்த நிகழ் சூத்திரம்!
தீயச்சதிகளை மதிக்கொண்டு வெல்லும் வேங்கை!

எதிரியையும் மதிக்கும் பண்பு!
ஏற்றி விடும் தைரிய ஏணி!
எவருக்கும் துரேகம் இழைக்கா அன்பு!
ஏக்கம் தீர்க்கும் பல இனத்தின் முன்னோடி!

நல்லவர்கள் பலர் வாழும் பேரினம்!
நாவும் தவழ்ந்து விளையாடும் கவி இலக்கணம்!
நவரசத் திறன் கொண்ட சிறப்பினம்!
நாகரிகச் சிறப்பு கற்றுத்தந்த தமிழ் இனம்!

ஆழ் தமிழன் உலகெங்கும்
ஆட்சி கொள்ளும் தமிழன்
நல் தமிழன் எப்போதும்
நன்றி பாராட்டும் தமிழன்

தீந் தமிழன் எந்நிலையிலும்
தீங்கு எண்ணாத் தமிழன்
ஆம் யாம் தமிழன்....

- தமிழ்நேசன் த.நாகராஜ்"